ஒரு பாடலின் உண்மையான வெற்றி என்பது யூடியூப் பார்வைகள் மற்றும் ஹாஷ்டேக் மூலம் மட்டுமே வரையறுக்கப்படுவதில்லை. மக்களை உடனடியாக முணுமுணுக்க,பாட வைப்பதிலும், விழாக்களில் ஒலிபரப்புவதிலும் இருக்கிறது. அந்தவகையில் சமீபத்தில் ஆர்.கே.நகர் படத்தில் ‘பப்பர மிட்டாய்’ என்ற ஒரு சென்சேஷனல் பாடலை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் பிரேம்ஜி.
இந்த கானா பாடல் கல்லூரி மாணவர்களிடமும், டீனேஜர்களிடமும் மிகவும் பிரபலமாகி இருக்கிறது. காஞ்சனா லோகன் எளிமையான பாடல் வரிகளும், கானா குணா அதை பாடிய விதமும் நிச்சயமாக அதை ஒரு வெற்றி பாடலாக்கி இருக்கிறது.
வடகறி பட இயக்குனர் சரவண ராஜன் இயக்கத்தில் வைபவ், சனா அல்தாஃப் மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் இந்தப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அஞ்சனா கீர்த்தி, சந்தனா பாரதி, சுப்பு பஞ்சு, இனிகோ பிரபாகரன், கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், டி.சிவா மற்றும் சில முக்கிய நடிகர்களும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.
“பிரேம்ஜி இசைத்திறமை மிகுந்த ஒரு கலைஞர். மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட ஒரு இசையமைப்பாளராகவே நான் அவரை உணர்கிறேன். அவருக்கு ஒரு இசையமைப்பாளராக கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை ஆர் கே நகர் நிச்சயம் பெற்றுத் தரும் என்று நம்புகிறேன்” என்கிறார் இயக்குனர் சரவண ராஜன்.